General04 June 2026

இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிப்பு

இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு ஆளாகும் சிறுவர்கள், பிற்காலத்தில் உடல் பருமன் போன்ற சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

இதன்படி ஐந்து வயதிற்குட்பட்ட மற்றும் ஐந்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட அண்மைய ஆய்வுகளின் தரவுகளினடிப்படையில் வளர்ச்சி குறைபாடு 10.1 சதவீதமாகவும்,குறைந்த எடை 16.1சதவீதமாகவும்,அதிக எடை 0.5 சதவீதமாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தரவுகளின்படி, நமது நாட்டில் உள்ள சிறுவர்களில் ஐந்தில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

இத்தகைய பின்னணியில், சிறுவயதில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ளும் சிறுவர்கள், அவர்களது இளம்பருவத்திலும் முதிர்ந்த பருவத்திலும் உடல் பருமன் நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related recommendation
Hiru TV News | Programmes