General06 June 2026

மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கையர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம்!

மத்திய கிழக்கு போர் காரணமாக இலங்கையில் சுமார் 13 இலட்சம் பேர் அடிப்படை உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக உணவுத் திட்டதின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் விரிவாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டில் ஏற்கனவே மதிப்பிடப்பட்ட 47 இலட்சம் பேர் வரை பாதிப்படையக்கூடும் என அறிவிக்கப்பட்டதற்கு மேலதிகமாக, 13 இலட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் புதிய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்டகாலப் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில், தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே உணவு நெருக்கடியை எதிர்கொள்வார்கள் எனவும் அந்த ஆய்வின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனது எரிசக்தித் தேவையில் 63 சதவீதத்தை மத்திய கிழக்கைச் சார்ந்துள்ளது.

அத்துடன், வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தில் 44 சதவீதம் வளைகுடா நாடுகளிலிருந்து கிடைக்கின்றது.

மேலும், 45 சதவீத தேயிலை ஏற்றுமதி வளைகுடா நாடுகளுக்கும் செல்கிறது.

இந்த நிலையில், எரிசக்தி விலைகள், வர்த்தகம் மற்றும் வருமானம் ஆகியவற்றில் ஏற்படும் அதிர்ச்சி தன்மை, தொழிலாளர்களையும் அவர்களின்; குடும்பங்களையும் பாதிப்பதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.

இதன் விளைவாக, குறித்த குடும்பங்களுக்குத் தேவையான உணவின் தரத்தையும், அளவையும் பேணும் நிலை படிப்படியாக குறைவடையும் என உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தீவிரமடைந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடி, உலகளாவிய ரீதியில் மேலும் பல மில்லியன் மக்களைப் பட்டினிக்குத் தள்ளக்கூடும் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் எச்சரித்துள்ளது.

இவ்வாறான பின்புலத்தில், நெருக்கடியின் முழுமையான தாக்கம் இன்னும் உணரப்படவில்லை என்பதே மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும் என உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes