General07 June 2026

உலகக் கிண்ண காற்பந்து தொடரில் வெடித்த அரசியல் போர்

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடர் எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் பதற்றம் விளையாட்டுத் துறையிலும் எதிரொலித்துள்ளது.

ஈரான் தேசிய காற்பந்து அணியின் முக்கிய பின்னணிப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துள்ளதாக ஈரான் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஈரான் அணி ஜூன் 15ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது முதலாவது போட்டியில் விளையாடவுள்ளது.

இதற்கமைய, வீரர்களுக்கும் "அத்தியாவசிய ஆதரவுப் பணியாளர்களுக்கும்" விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், "போலியான காரணங்களைக் கூறி பயங்கரவாதிகளை அமெரிக்காவிற்குள் கடத்துவதற்கு இந்த விசா முறையை ஈரான் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது" என்றும் அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய எவருக்கும் விசா வழங்கப்பட மாட்டாது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்திருந்தார்.

ஈரான் அணியின் சில வீரர்கள் இந்த அமைப்பில் கட்டாய இராணுவச் சேவையை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2025 மார்ச் மாதத்தில் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் முதலிடம் பெற்று ஈரான் உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்றது.

அதன் பின்னரே இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது.

உலகக் கிண்ணக் காற்பந்து வரலாற்றில், நடத்தும் நாடு ஒன்று, தன்னுடன் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அணியை வரவேற்பது இதுவே முதல் முறையாகும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, மே மாத இறுதியில் ஈரான் தனது பயிற்சி முகாமை அமெரிக்காவின் அரிசோனாவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றியிருந்தது.

இந்த தொடரில் ஈரான் அணி தனது குழுநிலைப் போட்டிகளில் பெல்ஜியம் மற்றும் எகிப்து ஆகிய அணிகளையும் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes