General08 June 2026

செம்மணி புதைகுழியில் இன்று மேலும் 4 என்புக்கூடுகள் மீட்பு : 16 புதிய எச்சங்கள் வெளிப்பாடு!

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள், இன்றைய தினம் 19ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய நாள் வரையிலான அகழ்வுப் பணிகளின் போது மொத்தம் 318 மனித என்புத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் 302 என்பு எச்சங்கள் துப்பரவாக்கப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வுப் பணிகளின் போது 04 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 16 என்புக்கூடுகள் புதிதாக வெளிப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி. நிரஞ்சன் தெரிவித்தார்.

இதேவேளை, றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு மற்றும் உதவியுடன் இந்த மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக இடம்பெற்று வரும் இந்த அகழ்வுப் பணியின் போது, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes