General08 June 2026

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட 3 இலங்கையர்கள் பத்திரமாக மீட்பு

எத்தியோப்பியாவிற்கு வேலை நிமித்தமாகச் சென்றிருந்த போது கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள், கூட்டு விசேட நடவடிக்கை மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்ட இலங்கையர்களை விடுவிப்பதற்காக 90,000 அமெரிக்க டொலர் பிணைப்பணம் கோரப்பட்டிருந்த நிலையில், இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு எத்தியோப்பியர்கள் மற்றும் நான்கு பாகிஸ்தானியர்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாகக் கைது செய்துள்ளனர்.

எத்தியோப்பியாவில் உள்ள இலங்கை தூதரகம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து எத்தியோப்பிய பாதுகாப்புப் படையினரால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஊடகப் பேச்சாளர் துஷாரா ரொட்ரிகோவிடம் எமது செய்திப் பிரிவு வினவியபோது, கடத்தப்பட்ட இலங்கையர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

எனினும், அவர்கள் இன்னும் நாட்டிற்கு அழைத்து வரப்படவில்லை எனவும், தற்போது எத்தியோப்பியாவில் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes