General10 June 2026

சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும்; இல்லையேல் வடகிழக்கில் பாரிய போராட்டம் வெடிக்கும்: நாடாளுமன்றத்தில் சிறீதரன் எச்சரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், தவறினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் வெடிக்கும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் அடக்குமுறைப் பாதையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணிக்கக் கூடாது என்றும் அவர் இங்கு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக நாட்டில் மீண்டும் ஒரு கொடூரமான சூழல் உருவாகத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வைத்து, கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த கணேஷ்குமார் சங்கீத்ஷன் என்ற இளம் பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த பயங்கரவாத தடைச் சட்டம், கடந்த காலங்களில் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்களை மிக மோசமாகப் பாதித்திருந்ததாகக் குறிப்பிட்ட சிறீதரன், இன்று ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பியினரின் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் பிரேமதாச ஆகியோர் இந்தச் சட்டத்தையே கொடூரமாகப் பயன்படுத்தினர் என்பதை நினைவூட்டினார்.

அதேபோல், தமிழ் இளைஞர்களும் பல்லாயிரக்கணக்கில் இந்தச் சட்டத்தினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes