General10 June 2026

ராப் பாடகர் சங்கீத்சன் கைது: கனடா முதல்வர் கண்டனம்

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 24 வயதுடைய தமிழ் ஹிப் ஹொப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார் கைது செய்யப்பட்டமைக்கு கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தியதாகக் கூறி கடந்த ஜூன் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், ஜூன் 17 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு கலைஞர் தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காகக் கைது செய்யப்படுவது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என முதல்வர் பெட்ரிக் பிரவுன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது ஜனநாயகப் பண்புகளை சீர்குலைக்கிறது. இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக பலமுறை உறுதியளித்த போதிலும், மாற்றுக்கருத்துக்களை ஒடுக்குவதற்காக இந்தச் சட்டத்தை அவர்கள் தொடர்ந்து ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டத்திற்குப் பின்னரும், தமிழர்கள் இன்னும் தீவிர இராணுவக் கண்காணிப்பு மற்றும் முறையான ஒடுக்குமுறையின் கீழேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையானது, பிரம்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள 'தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்' போன்ற நினைவுத் திட்டங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்துகிறது."

பாதிக்கப்பட்ட கலைஞரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மேயர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ஒழிக்குமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து தானும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டம் சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு முரணானது எனத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, முறையான குற்றச்சாட்டுகள் இன்றி கைது செய்யப்பட்டுள்ள சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், முன்னாள் அரச புலனாய்வுத் துறை பிரதானி சுரேஷ் சாலி உள்ளிட்டோரின் கைதுகளிலும் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, தன்னிச்சையான கைதுகளுக்கும் சித்திரவதைகளுக்கும் வழிவகுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக முழுமையாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes