General11 June 2026

நீதியரசர்களின் நியமனத்தில் தாமதம் - நாடாளுமன்றத்தில் சஜித் கேள்வி!

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தலா நான்கு நீதியரசர் பதவிகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக வெற்றிடமாக உள்ள போதிலும், அவற்றை நிரப்புவதற்கு அரசாங்கம் தவறியுள்ளமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த இரு நீதிமன்றங்களினதும் வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சில தொழில்முறை நீதிபதிகள் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

அமைப்பியல் மாற்றத்தை (System Change) ஏற்படுத்துவதற்காக ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நீதியரசர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது பொருத்தமானதொன்றல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கேள்விக்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நீதியரசர்களை நியமிப்பது ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் ஒரு விடயம் எனக் குறிப்பிட்டார்.

எனவே, ஜனாதிபதி செயலகத்திடமிருந்து முறையான தகவல்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் இது குறித்துப் பதிலளிப்பதாக அவர் தெரிவித்தார்.

நீதியரசர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதை உறுதியளித்த அமைச்சர், எனினும் அதற்கான காலக்கெடுவை (Timeframe) தம்மால் தற்போதைக்கு வழங்க முடியாது எனவும் நாடாளுமன்றத்தில் மேலும் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes