General12 June 2026

திடீரெனக் கொதித்தெழும் மசகு எண்ணெய் விலை!

மத்திய கிழக்கு மோதலால் உலகப் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் அபாயம்: உலக வங்கி எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்கு காரணமாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்திய மிக மந்தமான நிலையை நோக்கி உலகப் பொருளாதார வளர்ச்சி செல்லக்கூடும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்டுள்ள உலக வங்கியின் உலகப் பொருளாதார அறிக்கையில், 2026ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் இது, கடந்த ஜனவரி மாதக் கணிப்பில் இது 2.9 சதவீதமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

எரிசக்தி விலை உயர்வு, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அதிக கடன் வாங்கும் செலவுகள் ஆகியவையே இந்தக் குறைப்புக்கான காரணங்களாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பலவீனமான போர்நிறுத்தம் இரு தரப்பிலும் சோதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மோதலால் ஏற்படக்கூடிய கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.
அத்துடன், விநியோகத் தடைகள் மோசமடைந்தால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்றும் இந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியமை உலகளாவிய எரிசக்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், உலகளாவிய மசகு எண்ணெய் விலைக் குறியீடான ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை இந்த ஆண்டு சராசரியாக ஒரு பேரலுக்கு 94 டொலராக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு சராசரியை விட 36 சதவீதம் அதிகமாகும்.

உரம் விலையும் இந்த ஆண்டு கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளதால், அது உணவுப் பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த முக்கிய நீரிணை மூடப்பட்டதால், உலகளாவிய பணவீக்கம் இந்த ஆண்டு 4 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது 3.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை எரிசக்தி விநியோகத் தடைகள் மேலும் தீவிரமடைந்தால், உலகப் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 1.3 சதவீதம் வரை மிகக் மோசமாகக் குறையக்கூடும் என்றும், பணவீக்கம் 4.4 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளே இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
2027ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவீதமாக மேம்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இது 2010களின் சராசரி வளர்ச்சியை விட 0.4 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை,மத்திய கிழக்கு மோதலின் பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவ உலக வங்கி உறுதியளித்துள்ளது.

இதற்காக 60 பில்லியன் டொலர் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மோதல் நீடித்தால் இந்த ஆதரவை 100 பில்லியன் டொலர் வரை உயர்த்தத் தயாராக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes