General12 June 2026

வெரிட்டே ரிசர்ச் அம்பலப்படுத்திய அதிர்ச்சித் தகவல்: சிகரெட் வரியை உயர்த்தாததால் இலங்கைக்கு 1,730 கோடி ரூபாய் நஷ்டம்!

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையில் அனைத்துப் பொருட்கள், சேவைகள் மற்றும் வருமானங்கள் மீதான வரிகள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்ட போதிலும், சிகரெட்டுகள் மீதான வரிப் பங்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த மௌனமான செயலற்ற தன்மையால் நாட்டுக்கு ஆண்டுக்கு சுமார் 17.3 பில்லியன் ரூபாய் (1,730 கோடி ரூபாய்) வருமான இழப்பு ஏற்படுவதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

வெரிட்டே ரிசர்ச் அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2021 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இலங்கையர்களின் தனிநபர் மற்றும் நிறுவன வருமான வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டன. அத்துடன், வற் (VAT) வரி 18% ஆக உயர்த்தப்பட்டு, மேலும் 97 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளும் வரி வலைக்குள் கொண்டு வரப்பட்டன.

ஆனால், ஏனைய அனைத்துத் துறைகளிலும் வரிகள் அதிகரித்த போதிலும், சிகரெட்டின் சில்லறை விலையில் காணப்பட்ட வரிப் பங்கு சராசரியாக 7.2 சதவீத புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது.

சிகரெட் மீதான வரியின் பெரும்பகுதி 'கலால் வரியிலிருந்தே' பெறப்படுகிறது. இது ஒரு சிகரெட் குச்சிக்கு நிலையான ரூபாய் தொகையாக வசூலிக்கப்படுவதால், வற் வரியைப் போல சிகரெட்டின் விலை உயரும் போது இந்த வரி தானாக அதிகரிப்பதில்லை.

இதன் விளைவாக, சிகரெட் நிறுவனங்கள் தங்களின் விலையை உயர்த்திய போதும், அரசாங்கம் கலால் வரியை அதற்கேற்ப மாற்றியமைக்காமல் மௌனம் காத்ததால், சில்லறை விலையில் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரியின் பங்கு குறைவடைந்துள்ளது என வெரிட்டே ரிசர்ச் விளக்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு பரிந்துரையின்படி, சிகரெட் வரிகள் அதன் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75% ஆக இருக்க வேண்டும்.

2018 இல் இலங்கை இந்த சர்வதேச அளவுகோலுக்கு மிக நெருக்கமாக (74% வரிப் பங்கு) இருந்தது.

2026 இல் இலங்கை தற்போது இந்த வரிப் பங்கு 66.8% ஆகக் குறைந்துள்ளது.

எளிமையாகச் சொன்னால், சிகரெட்டுக்காக மக்கள் செலவிடும் ஒவ்வொரு 12 ரூபாயிலும் கிட்டத்தட்ட 9 ரூபாய் வரியாக அரசாங்கத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், தற்போது அரசாங்கம் சுமார் 8 ரூபாயை மட்டுமே வசூலித்து, ஒவ்வொரு 12 ரூபாயிலும் 1 ரூபாயை இழந்து வருகிறது.

இந்த 17.3 பில்லியன் ரூபாய் இழப்பு ஏன் முக்கியமானது?

வரியை மீண்டும் 75% ஆக உயர்த்தினால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்குக் கிடைக்கும் 17.3 பில்லியன் ரூபாய் கூடுதல் வருமானம், நாட்டின் பின்வரும் அத்தியாவசிய வரவுசெலவுத் திட்டங்களுக்குச் சமமானதாகும் என வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டியுள்ளது:

அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கான நிதியை விட கிட்டத்தட்ட 1.2 மடங்கு அதிகம்.

நாட்டின் போசாக்குத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை விட கிட்டத்தட்ட 1.3 மடங்கு அதிகம்.

அரசாங்கம் இந்த வரியைச் சரியாகச் சேகரித்திருந்தால், சாதாரண மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பிற வரிகளைக் குறைத்திருக்க முடியும்.

மேலும், 2003 இல் இலங்கை கையெழுத்திட்ட உலக சுகாதார அமைப்பின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான மாநாட்டு ஒப்பந்தத்தையும் (WHO FCTC) இலங்கை தற்போது மீறியுள்ளது.

இதற்கான தீர்வு மிகவும் எளிதானது என வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டுகிறது. சிகரெட் வரி விதிப்பு கலால் வரி மூலம் நிர்வகிக்கப்படுவதால், இதற்கென புதிய சட்டங்களோ அல்லது நாடாளுமன்ற ஒப்புதலோ தேவையில்லை.

நிதி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஜனாதிபதி, ஒரேயொரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் ஒரே நாளில் இந்த வரிப் பங்கை 75% ஆக உயர்த்தி, நாட்டின் வருவாயை அதிகரிக்க முடியும். இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானத்தைக் கொண்டு அடிப்படை உணவுப் பொருட்கள் மீதான மக்களின் வரிகளைக் குறைக்க முடியும் என அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes