General12 June 2026

சமூக வலைத்தளங்களில் காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள்: காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

அதிகாரிகளின் புகைப்படங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் (Cybercrimes) தொடர்பில் பொதுமக்கள் தீவிர விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறை ஊடகப் பிரிவினால் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களை ஏமாற்றுவதற்காக பின்வரும் உத்திகளைக் கையாள்வதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது விசேட விசாரணைப் பிரிவுகளின் பிரதிநிதிகள் எனத் தங்களைக் கூறிக்கொண்டு, அலுவலகத் தொலைபேசி அல்லது கையடக்கத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ளுதல்.

பாதிக்கப்பட்ட நபரின் தேசிய அடையாள அட்டை (NIC) மூலம் சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகக் கூறுதல், தெரியாத ஒரு இடத்தில் வங்கி அட்டை பெறப்பட்டு பணம் செலுத்தப்படாதுள்ளதாகக் கூறுதல் அல்லது பணச் சலவை குற்றச்சாட்டுகளில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அச்சுறுத்துதல்.

இரகசிய விசாரணை நடப்பதாகக் கூறி பயமுறுத்திய பின்னர், வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் போன்ற தளங்கள் ஊடாகத் தொடர்பு கொண்டு, போலியான உத்தியோகபூர்வ இலச்சினைகள் , அரசாங்க அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் போலி ஆவணங்களை அனுப்பி உண்மை என நம்ப வைத்தல்.

கணக்குகளை முடக்குவதிலிருந்து விடுவிப்பதாகக் கூறி, வங்கியின் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மற்றும் ரகசியத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதுடன், தெரியாத வங்கி கணக்குகளுக்குப் பணத்தையோ அல்லது 'USDT' போன்ற கிரிப்டோகரன்சிகளையோ (Crypto currencies) மாற்றுமாறு வற்புறுத்துதல்.

இந்த மோசடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்:

எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள், வட்ஸ்அப் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் தேசிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு விபரங்கள், அட்டை எண், CVV எண் அல்லது OTP குறியீடுகளைக் கோருவதில்லை. அவ்வாறு கேட்கப்படும் விபரங்கள் உடனடியாக மோசடி எனத் தீர்மானிக்கப்பட வேண்டும்.

கணக்குகள் முடக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தல்களுக்குப் பணிய வேண்டாம்.

அறிமுகமில்லாத கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுவதற்கு முன்னர், உங்களது வங்கியின் உத்தியோகபூர்வ தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு சுயாதீனமாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

காவல்துறையினர் , குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ (CID) அல்லது மத்திய வங்கியோ தனிப்பட்ட வட்ஸ்அப் எண்கள் மூலம் உத்தியோகபூர்வ விசாரணைகளை நடத்துவதில்லை. அவர்கள் பணத்தை வைப்பிலிடுமாறு ஒருபோதும் கோர மாட்டார்கள்.

உத்தியோகபூர்வ அறிவிப்புகள் அனைத்தும் எழுத்து மூலமே வழங்கப்படும், அவசியமேற்படின் சீருடை அணிந்த அதிகாரிகள் நேரில் வருவார்கள்.

சமூக வலைத்தளங்கள் மூலம் அரச நிறுவனங்களின் முத்திரைகள், சின்னங்கள் அல்லது அதிகாரிகளின் கையொப்பங்களுடன் வரும் ஆவணங்கள் போலியானவையாக இருக்க வாய்ப்புள்ளதால், அவற்றை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரியப்படுத்துங்கள்.

அறிமுகமில்லாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத சமூக வலைத்தளக் குழுக்களால் பகிரப்படும் இணைய இணைப்புகள் (Internet links), செயலிகள் (Applications) அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதைத் தவிர்க்கவும்.

விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை காவல்துறையினர் பொதுமக்களிடம் எந்தவொரு கட்டணமும் அறவிடுவதில்லை. விசாரணை நிமித்தம் பணம் கோரப்பட்டால், அது ஒரு மோசடிச் செயலாகும்.

முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கான தொடர்பு எண்கள்:

இதுபோன்ற நிதி மோசடிகள் அல்லது சைபர் குற்றங்கள் தொடர்பில் தகவல்களையோ அல்லது முறைப்பாடுகளையோ சமர்ப்பிக்க விரும்புவோர் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ள முடியும்:

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (மேற்பார்வை): 071 8592918

விசாரணை அதிகாரிகள்: 071 8591765

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (அலுவலகம்): 011 2300756

மேலும், பொதுமக்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) நேரில் சென்றும் இது தொடர்பான எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என இலங்கை காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes