General12 June 2026

பாடகர் சங்கீத்சன் விடுதலை: அரசியல் சுயலாபங்களைச் சாடிய அமைச்சர் சந்திரசேகர்!

கிளிநொச்சியைச் சேர்ந்த பிரபல மெல்லிசைப்  பாடகர் சங்கீத்சன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பாடகர் சங்கீத்சன் தொடர்ந்து சமூக மாற்றத்தை நோக்கிய எழுச்சிப் பாடல்களைப் பாட வேண்டும் என வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விசேட அறிவிப்பை விடுத்தார்.

கடந்த ஒரு வார காலமாக நாட்டில் விசேடமாகப் பேசப்பட்டு வந்தவரும், அரசியல் ரீதியாகப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தவருமான பாடகர் சங்கீத்சனின் விடுதலை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலமாகவே சாத்தியமாகியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சங்கீத்சனின் கைது விவகாரத்தை வைத்துச் சுயலாபம் தேட முயன்ற அரசியல்வாதிகளை வன்மையாகச் சாடினார். இது குறித்து அவர் பேசுகையில்:

"சங்கீத்சன் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது தாயார் அடைந்த வேதனையை என்னோடு பகிர்ந்து கொண்டார். தந்தை இல்லாத அந்த குடும்பத்தில், சந்தையில் வியாபாரம் செய்து மிகவும் கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தவர் அந்தத் தாய்.

ஆனால், இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு சில அரசியல் பின்னணி கொண்ட சட்டத்தரணிகள், சங்கீத்சன் ஊடாகத் தங்களது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றனர்.

சங்கீத்சன் ஒரு திறமையான பாடகர் என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர்,

அவர் தொடர்ந்து சமூக மாற்றத்தை நோக்கிய எழுச்சிப் பாடல்களைப் பாட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின் எதார்த்த நிலையைத் தனது பாடல்கள் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுமாறு பின்வரும் ஆலோசனைகளை வழங்கினார்.

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளும், காணாமல் போனவர்களின் குடும்பங்களும் அதிகம் உள்ளனர். அவர்களின் துயரங்களை உலகறியச் செய்யச் சங்கீத்சன் தனது குரலைப் பயன்படுத்த வேண்டும்.

கிளிநொச்சியில் இன்று பாரியளவில் மதுபான சாலைகளும், கசிப்பு மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் புழக்கமும் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பிடியில் சிக்கியுள்ள எமது மாவட்ட இளைஞர்களை மீட்பதற்காகச் சங்கீத்சன் தனது பாடல்கள் மூலம் குரல் கொடுக்க வேண்டும்.

பாடகர் சங்கீத்சனுக்கு ஆலோசனைக் கூறிய அமைச்சர் சந்திரசேகர்,

"இன்று சங்கீத்சனைப் பற்றி உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள மக்கள் என்னோடு பேசுகின்றனர். அந்தளவிற்கு அவருக்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆனால், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திச் சில தவறான நபர்கள் அவரைத் தவறான வழிக்குக் கொண்டு செல்ல முயலலாம்.

அதற்கு இடம் கொடுக்காமல், நாட்டின் நலனையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்திற்கொண்டு, ஒரு நல்ல பிள்ளையாகச் சஞ்சீஸ்வரன் ஆரோக்கியமான பாதையில் பயணிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்
Related recommendation
Hiru TV News | Programmes