International13 June 2026

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியது: பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உறுதி!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்டநாட்களாக நீடித்து வரும் பதற்ற தணிப்புக்கான "இறுதியான மற்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்ட அமைதி ஒப்பந்த உரை" எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அமைதி ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் பரவி வரும் ஊகங்களை நம்ப வேண்டாம் என அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையிலேயே, பாகிஸ்தான் பிரதமர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

"இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக பாகிஸ்தான் தற்போது இருதரப்புடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. அமைதி என்பது இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மிக அருகில் நெருங்கி வந்துள்ளது" என பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்றதொரு கருத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சியும் வெளியிட்டுள்ளார். ஒப்பந்தம் "இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அருகில்" உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஊடகங்கள் அதன் உள்ளடக்கங்கள் குறித்து ஊகங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஈரான் தரப்பில் இருந்து வெளிவந்த மிகத் தெளிவான இந்த அறிவிப்பை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' கணக்கில் மறுபதிவு செய்துள்ளார்.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி எல்லைக் கோட்டைத் தாண்டவில்லை என வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு,
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாகக் கலைக்க வேண்டும் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளிட்ட அணுசக்தி பொருட்களை அப்புறப்படுத்த அல்லது அழிக்க ஒப்புக்கொள்ள வேண்டும்.

சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாகத் திறக்கப்பட வேண்டும்.

பிராந்தியத்தில் உள்ள ஏனைய ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவை ஈரான் நிறுத்த வேண்டும்.

இந்த நிபந்தனைகளை ஈரான் செயல்படுத்துவதை உறுதி செய்த பின்னரே, முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகள் மற்றும் சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்றும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனே ஈரானுக்கு எவ்வித நிதியும் உடனடியாக வழங்கப்பட மாட்டாது என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி கருத்துத் தெரிவிக்கையில், ஒப்பந்த வரைவைச் சுருக்கமாகத் தயாரிக்கும் இறுதி கட்டத்தில் தொடர்புடைய நிறுவனங்கள் கூட்டங்களை நடத்தி வருவதாகக் கூறினார். எனினும், ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் இடம் அல்லது நேரம் குறித்து அவர் கருத்து வெளியிடவில்லை.

தெஹ்ரானில் இருந்து அல் ஜசீரா ஊடகவியலாளர் வழங்கிய தகவலின்படி, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈரானில் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர், இராணுவத் தலைமையகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை, நாடாளுமன்ற அரசியல்வாதிகள் மற்றும் இறுதியாக ஈரானின் உச்ச தலைவர் எனப் பல மட்டங்களில் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு, உள்நாட்டு ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் எனக்கூறி ஈரானிய அரச செய்தி நிறுவனமான IRNA வெளியிட்ட 7 முக்கிய புள்ளிகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாகச் சாடியிருந்தார்

ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், சொத்துக்கள் உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் அந்த போலி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்துப் பேசிய ட்ரம்ப், தவறான தகவல்களை வெளியிட்டதற்காக ஈரான் தரப்பு தனிப்பட்ட முறையில் "மன்னிப்புக் கேட்டுள்ளது" என்று தெரிவித்ததுடன், வரும் வார இறுதிக்குள் புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தான் இன்னும் நம்புவதாகவும் அக்ஸியோஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes