General15 June 2026

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என உத்தரவிடுமாறு கோரி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த சீராய்வு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

யோஷித ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ், இந்த வழக்கில் தனது சேவைப்பெறுநருடன் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த டெய்ஸி ஃபோரஸ்ட் என்ற பெண் சட்டமா அதிபரினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நிலைமை அவ்வாறிருக்க, தனது சேவைபெறுநருக்கு எதிராக மாத்திரம் "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்வது சட்டத்துக்கு முரணானது என அவர் வாதிட்டார்.

எனினும், ஒரு பிரதிவாதிக்கு எதிராக மட்டுமேயாயினும் "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சட்டப்பூர்வ சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, இந்த சட்ட நிலைமை குறித்து நாளை முழுமையான விசாரணையை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes