General15 June 2026

சுரேஷ் சலேவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அரசியல் குழுக்களைப் பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளைக் குலைக்க முயற்சிப்பது யாருக்கும் நன்மையளிக்காது என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டுமே தவிர, அவற்றைச் சீர்குலைக்க முற்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராதனை போதனா மருத்துவமனையில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சரியான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வெளிவரும் சாட்சியங்களின் அடிப்படையில் சில நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மேலதிக விசாரணைகளுக்காக அவர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்படுகின்றன.

இந்த விபரங்கள் அனைத்தையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், அவ்வப்போது பி அறிக்கைகள் மூலம் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்கிறது.

அதன் அடிப்படையிலேயே சுரேஷ் சலே தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது முதலாவது 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் மே மாத இறுதியில் நிறைவடைந்தது. தற்போது மேலும் 90 நாட்களுக்கான தடுப்புக் காவல் உத்தரவு கையெழுத்திடப்பட்டு, அதற்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டுமாயின், காவலில் உள்ள சுரேஷ் சலே தமக்குத் தெரிந்த தகவல்களை விரைவாக வழங்க வேண்டும்.
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அவர் குற்றமற்றவர் என நிரூபிப்பதற்கான வழியாகும்.

தவறு செய்திருந்தால் மட்டுமே தகவல்களை மறைக்க வேண்டிய தேவை ஏற்படும். குற்றமற்றவர் என்றால் அச்சப்படாமல் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

தற்போது அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஊட்டச்சத்து நிலைமையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது அறிக்கைகள் மூலம் உறுதியாகியுள்ளது.

அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகள் முறையாகக் கிடைக்கின்றன. எனவே, அவரால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க முடியும்.

தடுப்புக் காவல் உத்தரவில் உள்ள ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் சில உள்ளன. அவை அனைத்தும் சலேயிற்கு வழங்கப்படுகின்றன.

அவர் மருத்துவ சிகிச்சை கோரியபோது அது வழங்கப்பட்டது; பல் மருத்துவ சிகிச்சை கோரியபோதும் அது வழங்கப்பட்டது. அவருக்கு சிறப்புச் சலுகைகளோ அல்லது புறக்கணிப்புகளோ காட்டப்படவில்லை, சாதாரண நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

விசாரணைகளைச் சரியாக முன்னெடுக்கும் அதிகாரி ஒருவரை நீக்குமாறு யாராவது கூறினால், அவ்வாறு குற்றம் சுமத்தும் நபரே குற்றவாளி என்பது அதிலிருந்து தெளிவாகப் புலனாகிறது." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes