General16 June 2026

வித்யா கொலை வழக்கு: மூவரின் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்தது யாழ் மேல் நீதிமன்றம்!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குற்றவாளிகள் முன்னிலையில் வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், உயர் நீதிமன்றினால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு பேரையும், மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்ததுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகளில், குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட 07 பேருக்கும், யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட தீர்ப்பாயத்தினூடாக மரண தண்டனை விதித்து தீர்பளித்தது.

குறித்த தீர்ப்பினை ஆட்சேபித்து, குற்றவாளிகள் அறிவிக்கப்பட்ட 07 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்திருந்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணைகளில், இரண்டு பேரை விடுதலை செய்த உயர் நீதிமன்றம், ஏனைய ஐவரின் மரண தண்டனையையும் உறுதி செய்தது.

இந்தக் குற்றச் சம்பவத்தின் வழக்கு விசாரணை காலத்திலேயே மரண தண்டனை கைதி ஒருவர் நோய் வாய்ப்பட்டு, சிறையிலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட ஏனைய நால்வரின் தண்டனையையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் மீண்டும் வாசித்து அறிவிப்பதற்காக, குற்றவாளிகள் கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சிறைச்சாலைக்குள் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

அதனால் தீர்ப்பினை உறுதி செய்வதற்காக அன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்கு, எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐந்து குற்றவாளிகளில் இருவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் ஏனைய மூவருக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பை மேல் நீதிமன்று வாசித்து காட்டி உறுதி செய்தது.
Related recommendation
Hiru TV News | Programmes