General21 June 2026

பம்பலப்பிட்டியில் உடற்பிடிப்பு மையம் என்ற பெயரில் இயங்கிய விடுதியில் சோதனை : தாய்லாந்து பெண்கள் உட்பட 6 பேர் கைது!

பம்பலப்பிட்டியில் உடற்பிடிப்பு மையம் என்ற பெயரில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (20) பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ஓஷன் டவரின் ஒரு பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த விடுதியை நிர்வகித்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரும், பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக பம்பலப்பிட்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட உள்ளூர் பெண்கள் 27, 35 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் முறையே எல்லகாவ, கலவான மற்றும் கல்கமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் 34, 41 மற்றும் 43 வயதுடைய தாய்லாந்து நாட்டவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes