General21 June 2026

நீதியரசர்கள் வெற்றிடப் பிரச்சினை: அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயார்

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதியரசர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு எதிராகத் தீர்க்கமான அரசியல் நகர்வை மேற்கொள்வது குறித்து எதிர்க்கட்சிகள் கலந்துரையாடி வருகின்றன.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து சபாநாயகரிடம் கையளித்த கடிதத்திற்கு, ஜனாதிபதி அல்லது அரசாங்கத் தரப்பிலிருந்து இதுவரை எவ்விதப் பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

இந்தச் சூழ்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வாரத்தில் அரசாங்கத்திற்கு எதிராகத் தீர்க்கமான அரசியல் நகர்வை மேற்கொள்வது குறித்து எதிர்க்கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளதாக ஞாயிறு சிங்கள வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, அரசாங்கத்திற்கு எதிராக எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் போதியதாக இல்லாததால், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையைக் கொண்டு வருவது கடினம் என்பதே எதிர்க்கட்சிகள் அனைத்தினதும் கருத்தாக உள்ளது.

இதன் காரணமாக, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வர தற்போது பொதுவான இணக்கப்பாடு ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு, நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தயாரித்தல் மற்றும் அதனைச் சமர்ப்பித்தல் தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes