General22 June 2026

பயனடைந்தவரே குற்றவாளி: அருட்தந்தை சிறில் காமினியிடம் உதய கம்மன்பில 10 கேள்விகள்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வரும் கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களின் பக்கமா அல்லது தாக்குதல் நடத்தியவர்களின் பக்கமா என்ற நியாயமான சந்தேகம் எழுவதாகத் தெரிவித்து, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில அவரிடம் 10 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இந்த கேள்விகளுக்குப் பதிலளித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களைத் தீர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1. "பயனடைந்தவரே குற்றவாளி" என்ற பிரபல சதி கோட்பாட்டின் அடிப்படையில், 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பலனை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்டதாகக் கூறி நீங்கள் அவர் மீது சந்தேகத்தை திருப்புகிறீர்கள்.

ஆனால் 2018 உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின்படி, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இவ்வாறானதொரு தாக்குதலின் மூலம் பலன் பெற வேண்டிய தேவை இருக்கவில்லை. மறுபுறம், கர்தினால் மெல்கம் ரஞ்சித் 2022 நவம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றாலும், உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை சுட்டிக்காட்டி இதுவரை நான்கு முறை சேவை நீடிப்பைப் பெற்றுள்ளார். அப்படியென்றால், இந்த சதி கோட்பாட்டின்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான பயனாளியான கர்தினால் மீது நீங்கள் ஏன் பழியை சுமத்துவதில்லை?

2. செனல் 4 அலைவரிசை ஊடாக அசாத் மௌலானா குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், அதாவது 2021 ஒக்டோபர் மாதம் நடைபெற்ற காணொளி கலந்துரையாடலில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வாறு கூறுவதற்கு அடிப்படையாக அமைந்த சான்றுகளை நாட்டுக்கு முன்னிலையில் பகிரங்கப்படுத்துவீர்களா? இல்லையெனில் அதற்கான காரணம் என்ன?

3. எதிர்க்கட்சியின் சில அரசியல்வாதிகள் விசாரணைகளை சீர்குலைக்க மற்றும் அவற்றை நிறுத்த அழுத்தம் கொடுப்பதாக நீங்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தீர்கள். உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை அல்லது சுரேஷ் சலேவுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் பெயர்கள் என்ன?

4. கடவுச்சொற்களை வழங்குவதன் சட்டப்பூர்வத்தன்மை மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தனது கைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை (passwords) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு விசாரணையின் போது சந்தேகநபர் ஒருவரை அந்த விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது என்பதை நீங்கள் அறிவீர்களா?

5. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளார் என்பது நீதிமன்ற மருத்துவ அறிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் நீங்கள் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி, அந்த மனிதாபிமானமற்ற நடத்தையை நியாயப்படுத்த முயற்சிப்பது இயேசு நாதரின் அன்பின் செய்திக்கு உடன்பாடானதா?

6. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஷானி அபேசேகரவிடமே மீண்டும் விசாரணைகளை ஒப்படைக்குமாறு நீங்கள் கோரும் போது, அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குற்றவாளிப் பட்டியலில் உள்ளவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

7. சஹ்ரான் உள்ளிட்ட முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை குறித்து ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.ஜே. அல்விஸ் ஜனாதிபதி விசாரணைக்குழு பரிந்துரைத்திருந்தது. அவ்வாறு இருந்தும் அவர்களுக்கு அந்தப் பதவிகளை மீண்டும் வழங்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உங்களிடம் மறைப்பதற்கு ஏதேனும் இருப்பதனாலா? அல்லது இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைப்பதற்கான காரணம் என்ன?

8. தாக்குதல் இடம்பெற்ற போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பதவிகளை வகித்த ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு மீண்டும் விசாரணைகளை ஒப்படைக்குமாறு கோருவது, அப்போதைய கிழக்கு கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு கோருவது ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

9. 2024 செப்டம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில் நீங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி 'அபு ஹிந்த்' எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் அதற்கு முன்னரும் பின்னரும் மீண்டும் சூத்திரதாரி சுரேஷ் சலே எனக் கூறுகிறீர்கள். இவ்வாறு அவ்வப்போது சூத்திரதாரியை மாற்றுவதற்கு தூண்டிய காரணங்கள் என்ன?

10. 'அபு ஹிந்த்' தான் சூத்திரதாரி என்பது தொடர்பாக உங்களிடம் உள்ள தகவல்களை இதுவரையில் விசாரணையாளர்களிடம் ஒப்படைத்துள்ளீர்களா? இல்லையெனில் அதற்கான காரணம் என்ன? என்று உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னிடம் அருட்தந்தை சிறில் காமினியிடம் கேட்பதற்கு 37 கேள்விகள் உள்ளதாகவும், ஒரே நாளில் அனைத்தையும் கேட்க முடியாது என்பதால் இன்றைய தினம் இந்த 10 கேள்விகளை முன்வைப்பதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அருட்தந்தை சிறில் காமினி இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்கு முற்பட்டால், அவரது அடுத்த ஊடகவியலாளர் சந்திப்புகளில் இந்த கேள்விகளுக்குப் பதில்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு உதய கம்மன்பில ஊடகவியலாளர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes