General23 June 2026

மன்னாரில் ஈக்கள், பறவைக் கழிவுகளுக்கு மத்தியில் வடை தயாரிப்பு : அதிரடியாக மூடப்பட்ட வடை தயாரிப்பு நிலையம்!

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று சுகாதார விதிமுறைகளை மீறிச் செயல்பட்டமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகளால் இன்று (23) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது இந்த சுகாதார மீறல்கள் கண்டறியப்பட்டன.

ஆய்வின் போது, மனிதர்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதல்லாத மற்றும் மிகவும் சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தமை உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக, உணவு தயாரிக்கும் இடத்தில் அதிகளவில் ஈக்கள் காணப்பட்டதுடன், கழிவுநீர் முறையாக அகற்றப்படாமல் தேங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோழிகள், புறாக்கள் மற்றும் பிற செல்லப்பிராணிகளின் கழிவுகள் காணப்பட்ட அசுத்தமான சூழலில் உணவு தயாரிக்கப்பட்டிருந்ததோடு, உணவு தயாரிப்பு நிலையத்தின் ஒட்டுமொத்த சுகாதார நிலையும் மிகவும் மோசமாக இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த நிலையத்தின் உணவு தயாரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு அதன் உரிமையாளருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டிய அனைத்து குறைபாடுகளையும் முழுமையாக நிவர்த்தி செய்து, இடத்தை சுத்தப்படுத்தி, தேவையான அனுமதிகளை மீண்டும் பெற்ற பின்னரே நிலையத்தை மீள இயக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியில் உணவு பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes