General23 June 2026

அரச வாகன துஷ்பிரயோகம்: பௌசிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதி அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அரச வாகனம் ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தியதன் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளதுடன், அதன் தீர்ப்பை மறுதிகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமைகள் மனு, பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதியரசர்கள், வழக்கின் தீர்ப்பை எதிர்காலத் திகதியொன்றில் அறிவிப்பதாகக் கூறினர்.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அனர்த்த முகாமைத்து நிலையத்துக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை ஏ.எச்.எம். பௌசி தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும், இதன்மூலம் அரசுக்கு சட்டவிரோத நஷ்டத்தை ஏற்படுத்தி பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், முன்னாள் பிரதி அமைச்சர் பௌசி தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருந்தார் என்பது இந்த விசாரணை நடவடிக்கைகளின் போது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
Related recommendation
Hiru TV News | Programmes