General24 June 2026

"மலையக மக்கள் நாட்டுக்கு 300 பில்லியன் டொலர் ஈட்டித் தந்துள்ளனர்; காணிகள் 10 பேர்ச் ஆக உயர்வு!" – அமைச்சர் சமந்த வித்யாரத்ன!

இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ள மலையக மக்களுக்கு வீடமைப்பிற்காக வழங்கப்படும் காணியின் அளவு 10 பேர்ச்சஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது. அதன் போது எழுப்பப்பட்ட வாய்மூலக்கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

"இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகளைக் கடந்துள்ள மலையகச் சமூகம், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. கடந்த ஆண்டில் மாத்திரம் தேயிலை ஏற்றுமதி மூலம் 1.5 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது. வரலாற்றை ஆராய்ந்தால், அவர்கள் நாட்டிற்குச் சுமார் 300 பில்லியன் டொலர் வரை ஈட்டித் தந்துள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும், "கடந்த அரசாங்க காலத்தில் மலையக மக்களுக்கு 7 பேர்ச்சஸ் காணியே ஒதுக்கீடு செய்யத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான எமது அரசு அதனை 10 பேர்ச்சஸ் ஆக உயர்த்தியுள்ளது.

தற்போது இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 28 இலட்சம் ரூபாய் பெறுமதியில் 466 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

அவற்றுக்கான நீர், மின்சாரம் மற்றும் வீதி வசதிகளை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் ஒரு வீட்டிற்குத் தலா 4 இலட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தோட்ட வீடுகளைப் புனரமைக்க 32 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டார்.

எனினும், மலையகத்தில் உள்ள சுமார் 2 இலட்சம் குடும்பங்களுக்குக் காணிகளை வழங்குவதில் நிலப் பற்றாக்குறை மற்றும் மண்சரிவு அபாயங்கள் போன்ற சவால்கள் காணப்படுவதாகவும், அவற்றைக் கடந்து மக்களின் உரிமைகள் படிப்படியாக உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes