General24 June 2026

எல் நினோ, லா நினா பாரிய பேரழிவாக மாறுவதற்கு முன்னர் அதனைத் தடுப்பதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எல் நினோ (El Niño), லா நினா (La Niña) நிலைமைகளின் கீழ் கடுமையான வறட்சியான காலநிலை மற்றும் அதன் பின்னர் ஏற்படும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக பாரிய அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்றும், இது குறித்து ஆராய்வதற்கு அரசாங்கம் தனியான குழுவொன்றை நியமித்துள்ளதாகக் கூறினாலும் அது போதுமானதாக இல்லை என்பதால், இப்பேரழிவுகளைத் தடுப்பதற்கான முன் ஆயத்தமாக ஜனாதிபதி செயலணி ஒன்றை உடனடியாக நிறுவ வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எல் நினோ, லா நினா காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் துறை சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்திய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

இந்த அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு தற்போதைய அனர்த்த முகாமை செயல்முறை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்
என்பதால், இதற்கான அவசர தேசிய வேலைத்திட்டத்திற்கு எதிர்க்கட்சியும் தனது பங்களிப்பை வழங்கும் என்றும், இது கட்சி, இனம், மதம், சாதி, வகுப்பு வாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசியப் பிரச்சினை என்பதால், இந்த அபாயத்திற்கு எதிராக முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தரமற்ற விதைகள், உர மானியம் முறையாகக் கிடைக்காமை, விவசாய உபகரணங்களின் விலை அதிகரிப்பு மற்றும் யானை-மனித மோதல் போன்ற பிரச்சினைகளால் ஒட்டுமொத்த விவசாய மக்களும் எல்லையற்ற அழுத்தங்களுக்கும் அசெளகரியங்களுக்கும் முகங்கொடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

தேர்தல் காலத்தில் வயலில் இறங்கி ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் தருவதாக உறுதியளித்த போதிலும், தற்போதைய அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் இன்று விவசாயிகளை நிர்க்கதியாக்கி வருவதாகவும், தேர்தல் காலத்தில் 'விவசாயியே தெய்வம்' என்று கூறி ஆட்சியைப் பிடித்துவிட்டு, இன்று விவசாயிகளை கசிப்பு வியாபாரிகள் என முத்திரை குத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாதுகாக்கப்பட்டு மாகாண சபைகளின் அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், 13- அல்லது 13+ அல்லாமல், 13 ஆவது திருத்தம் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறையின் எல்லை குறித்து தற்போது சட்ட ரீதியான பின்னணி உருவாகியுள்ளது. இந்தச் சட்டத்தில் 10 மில்லியன் ரூபா அபராதம் மற்றும் 3 வருட சிறைத்தண்டனை உள்ள போதிலும், பெரிய அளவிலான முதலீட்டாளர்கள்/அபிவிருத்தியாளர்கள் இந்த மதிப்பீட்டு செயல்முறையைத் தவிர்த்துச் செல்ல இடமுண்டு என்பதால், இவ்வாறான ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes