General24 June 2026

தேர்தலில் 'அழியாத மை' நடைமுறையை நீக்குவதன் மூலம் 100 மில்லியன் சேமிப்பு!

தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் வாக்காளர்களின் விரல்களில் இடப்படும் 'அழியாத மை' நடைமுறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலுக்கு சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பப்ரல் தலைமை அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த முன்மொழிவு பல கோணங்களில் நேர்மறையான ஒரு நடவடிக்கையாகும்.

அரசியல் கட்சிகள், பங்குதாரர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே இது பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையை ஒழிப்பதன் மூலம், அழியாத மை இறக்குமதி, விநியோகம் மற்றும் அதன் நிர்வாகக் கையாளுதல் தொடர்பான செலவுகள் குறையும்.

இது தேர்தல் செலவுகளை ஒட்டுமொத்தமாகக் குறைப்பதற்கு பங்களிக்கும்.

வாக்காளர் அடையாள அட்டைகளின் கட்டாயத் தேவை வாக்காளர் சரிபார்ப்பு செயல்முறைகளை வலுப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தேர்தல்களின் போது ஆள்மாறாட்டம் செய்வதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைந்துள்ளன.

தற்போதைய சூழலில், முன்னைய காலங்களை விட அழியாத மையின் தேவை குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பல தசாப்தங்களாக இலங்கையின் தேர்தல் செயல்முறையின் ஒரு அங்கமாக அழியாத மை பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், நவீனமயமாக்கப்பட்ட வாக்காளர் இடாப்புகள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக, மோசடியான வாக்குகளைச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes