General25 June 2026

விஜயதாசவின் மகன் ரகித மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் வசந்த குமார அபேசிங்க மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் வானூர்தி நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வருஷஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (25) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் 'ஹரக் கட்டா, காவல்துறையினரால் இல்லாமல் ஆக்கப்படுவதைத் தடுப்பதற்காகவும், தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி காலி பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு மாற்றாக வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும், புலனாய்வு நடவடிக்கைகளிலிருந்து அவரை விடுவிப்பதற்கும் உதவுவதாகக் கூறி கையூட்டல் கோரப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதற்காக, கடந்த 2023ஆம் ஆண்டு டுபாயில் வைத்து, 'ஹரக் கட்டா'வின் மனைவியான மதுஷிகா மதுவந்தி என்பவரிடம் சந்தேகநபர்கள் கையூட்டல் கோரியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களினால் சந்தேகநபரின் மனைவியிடமிருந்து ஆரம்பத்தில் 50 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.

பின்னர் அந்தத் தொகை 20 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு, அதில் முன்பணமாக 12 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes