General25 June 2026

5 மாதங்களில் 7 பில்லியன் டொலர் மைல்கல் சாதனை: இலங்கையின் ஏற்றுமதித் துறை அதிரடி வளர்ச்சி!

இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதித் துறை வருமானம் நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் (ஜனவரி - மே) 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மாபெரும் மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிபரங்களின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026 மே மாதத்தில் மாத்திரம் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 18.34 வீதம் என்ற பாரிய வளர்ச்சியினைப் பதிவு செய்து, 1,570.64 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டு துறைகளையும் உள்ளடக்கிய இலங்கையின் ஒட்டுமொத்த கூட்டு ஏற்றுமதி வருமானம் 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் 7,393.39 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.56 வீத வளர்ச்சியாகும்.

இதில் பொருட்கள் ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட ஒட்டுமொத்த வருமானம் 5,758.44 மில்லியன் டொலர்களாகும் (7.63 வீத வளர்ச்சி). அதேநேரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவைகள் ஏற்றுமதித் துறை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து 1,634.95 மில்லியன் டொலர்களை (7.31 வீத வளர்ச்சி) நாட்டுக்கு ஈட்டித் தந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1,223.49 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது 18.25 வீத வருடாந்த வளர்ச்சியைக் காட்டியுள்ளது. அதேபோன்று, சேவைகள் ஏற்றுமதித் துறை மே மாதத்தில் 347.15 மில்லியன் டொலர்களைப் பெற்று, கடந்த ஆண்டை விட 18.67 வீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இந்த அபார வளர்ச்சி குறித்து இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவரும் முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், முதல் 5 மாதங்களிலேயே 7 பில்லியன் டொலர் இலக்கைத் தாண்டியிருப்பது இலங்கை ஏற்றுமதியாளர்களின் பலம், புதிய சூழலுக்குத் தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் மற்றும் அவர்களின் விடாமுயற்சி ஆகியவற்றையே பிரதிபலிக்கிறது என்றார்.

ஆடைத் துறை வழக்கம் போல நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் வருமானம் 6.66 வீதத்தினால் அதிகரித்து 414.72 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. குறிப்பாக, இலங்கையின் முக்கிய சந்தையான அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 14.51 வீதம் என்ற கணிசமான வளர்ச்சியைக் கண்டு, இத்துறைக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.

தென்னைத் துறை 17.13 வீதம் என்ற பலத்த வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளது. இதில் தென்னை நார் பொருட்கள் 32.95 வீதத்தினாலும், சிரட்டை உற்பத்திகள் 29.18 வீதத்தினாலும், தென்னை முளைக் கரு பொருட்கள் 6.13 வீதத்தினாலும் சர்வதேச சந்தையில் நன்மதிப்பைப் பெற்று வளர்ச்சியை எட்டியுள்ளன.

அறிவுச் சார்ந்த சேவைகள் ஏற்றுமதித் துறையில், தகவல் தொழில்நுட்பத் துறை தனது நிலையான வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டு மே மாதத்தில் மாத்திரம் 158.21 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுத் தந்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 1.12 வீதம் என்ற சிறிய வீழ்ச்சியைக் கண்டு, 130.33 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. முக்கியமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதி 42.32 வீதத்தினால் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்ததே இதற்கு காரணமாகும். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் (76.92 வீதம்), ஈரான் (82.23 வீதம்) மற்றும் ஈராக் (61.43 வீதம்) ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி கணிசமாகக் குறைவடைந்துள்ளது.

இருப்பினும், சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு உள்ள நன்மதிப்பு மற்றும் பலமான சந்தை இருப்பு காரணமாக இத்துறை நாட்டின் முதன்மை வருமான ஈட்டியாகத் தொடர்ந்து நீடிக்கிறது.
Related recommendation
Hiru TV News | Programmes