General28 June 2026

அதிவேக மற்றும் கவனக்குறைவான சாரதிக்கு எதிராக உடனடி அபராதம் இல்லை; நேரடியாக சட்ட நடவடிக்கை!

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக உடனடி அபராதங்களை விதிப்பதற்குப் பதிலாக, நேரடியாகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (26) வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் 1,292 உயிரிழப்புகளை ஏற்படுத்திய வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளினால் 1,357 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே காலப்பகுதியில், 2,512 பாரதூரமான விபத்துகளும், 5,059 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் 467 பாதசாரிகளும், 465 உந்துருளி செலுத்துநர்களும் அடங்குவதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவையே வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்கள் என பிரதி காவல்துறை மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes