General28 June 2026

பொசன் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை: வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் நால்வர் கைது

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று மற்றும் நாளை நாடு முழுவதும் உள்ள மாடு அறுக்கும் இடங்கள் மூடப்பட வேண்டுமென அரசாங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்ய முற்பட்ட மாடு அறுக்கும் இடமொன்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

ராகம, மஹாபாகே பகுதியில் அமைந்துள்ள இந்த மாடு அறுக்கும் இடத்தை சுற்றிவளைத்த காவல்துறையினர், அங்கிருந்து 5,000 கிலோகிராமிற்கும் அதிகமான மாட்டிறைச்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், குறித்த இடத்தில் எருமை மாடுகளின் தலைகள் மற்றும் இறைச்சிக்காகப் பயன்படுத்த முடியாத கழிவுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, குற்றச்சாட்டில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், பொசன் பௌர்ணமி தினத்திதை முன்னிட்டு மற்றைய மாடு அறுக்கும் இடங்கள் மூடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கு இறைச்சியை விநியோகிப்பதற்காக இந்த மாடுகள் அறுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹாபாகே காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related recommendation
Hiru TV News | Programmes