General28 June 2026

நாகப்பட்டினம் துறைமுகத்தில் வரியில்லா சில்லறை விற்பனை நிலையங்கள்!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்வழிப் பயணிகள் சேவையை மேம்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் முனையத்தில் வரியில்லா (Duty-free) விற்பனை நிலையங்களை அறிமுகப்படுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு இணையான தரமான வசதிகளை நாகப்பட்டினம் முனையத்திலும் வழங்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வரும் சூழலில், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், வர்த்தக மற்றும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தவும் இது உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான இந்த படகு சேவை, சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள், வர்த்தகர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு முக்கிய இணைப்பாக மாறியுள்ளது.

தற்போது வரை 25,000க்கும் அதிகமான பயணிகள் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

வரியில்லா விற்பனை நிலையங்களை அமைக்கும் பணிகளை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். இந்த நிலையங்களை அமைப்பதற்கான அடிப்படைப் பணிகள் ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளது.

அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த விற்பனை நிலையங்கள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முனையத்தின் வணிக மதிப்பை அதிகரிக்க, வரியில்லா விற்பனை நிலையங்களுடன் இணைந்து அந்நியச் செலாவணி மாற்றும் (Foreign Exchange) மையங்களை உருவாக்குவதற்கான விலைமனுக்களும் கோரப்பட்டுள்ளன.

இந்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியுள்ள சர்வதேசப் பயணிகள் இந்த விற்பனை நிலையங்களில் வரிவிலக்குடன் கூடிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes