General28 June 2026

செம்மணி கொடூரங்களுக்கு நீதி கோரி 'உரிமைப்பந்தம்'மக்கள் எழுச்சி!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு நீதி கோரி, ‘உரிமைப்பந்தம்’ என்ற தொனிப்பொருளில் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று மாலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் செம்மணிச் சந்தியில் அமைந்துள்ள அணையா விளக்குத் திடலில் இன்று மாலை 4.30க்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.

கடந்த வருடம் இதே நாளில் செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட 'அணையா விளக்கு' போராட்டத்தின் தொடர்ச்சியாக, நீதிக்கான குரலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் எழுச்சி இன்று நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுத் தங்களின் நீதிக்கான கோரிக்கையை முன்வைத்தனர்.

நீண்டகாலமாக நீதிக்காகக் காத்திருக்கும் மக்கள், குறிப்பாக முன்வைக்கப்பட்டுள்ள ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தக் கோரியும் இந்த அமைதி வழிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

செம்மணி மண்ணில் இடம்பெற்ற கொடூரங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் ஓயாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த மக்கள் எழுச்சி அமைந்திருந்தது.
Related recommendation
Hiru TV News | Programmes