General29 June 2026

தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை - மாவட்ட ரீதியாக அறிக்கை கோரல்

தேர்தல்கள் செலவு தொடர்பில், உரிய காலத்துக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீது மாவட்ட ரீதியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து, உரிய அதிகாரிகளிடம் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

சூரியன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மாஅதிபரிடம் ஆணைக்குழு கோரியுள்ளது.

அத்துடன், அந்தந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர்களுடன் ஒருங்கிணைந்து, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை அடுத்த மாதத்திற்குள் பெற்றுக்கொள்ள ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வேட்பாளர்கள் மற்றும் கட்சிச் செயலாளர்கள் தங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற அல்லது பொது மன்னிப்பு வழங்கக் கோரியிருந்தனர்.

எனினும், கடந்த 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இல்லை என்று அவர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தேர்தல் முடிவடைந்த 21 நாட்களுக்குள், வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்களின் பிரசாரச் செலவுகள் மற்றும் நிதி ஆதாரங்கள் தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது சட்டமாகும்.

இந்த சட்டத்தை மீறியதற்காகவே நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, சூரியன் செய்தி சேவைக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes