General30 June 2026

அரசாங்கத்தின் ஏமாற்று வேலைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் - தனியார் பேருந்து சங்கம்!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப்பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

"தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) கொள்கையின்படி, ஜூலை 1 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் பேருந்து கட்டண திருத்தம் அதற்கு 3-4 நாட்களுக்கு முன்னரே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.

மே மற்றும் ஜூன் மாத இறுதி வரையிலான டொலர் மதிப்பு மற்றும் செலவுகளைக் கணக்கிட்டே இது தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால், அரசாங்கம் இந்த சட்டபூர்வமான வழிமுறைகளை முற்றாக மீறியுள்ளது.

அரசாங்கம் கடந்த காலங்களில் அதிக விலைக்கு டீசலை கொள்வனவு செய்தமையால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட முனைகிறது.

பேருந்துக் கட்டணங்கள் அதிக சதவீதத்தால் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தினால், அரசாங்கம் அவசர அவசரமாக டீசல் விலையில் சிறிய மாற்றங்களைச் செய்து, கட்டண அதிகரிப்பு சதவீதத்தை மக்கள் கண்ணில் மண்ணைத் தூவி குறைக்க முயற்சிக்கிறது.

"அரசாங்கம் எப்படிச் செய்தாலும் இறுதியில் இந்த நட்டத்தை பொதுமக்களே திறைசேரி ஊடாகச் செலுத்த வேண்டியிருக்கும். அடித்த பின் கட்டுவதும் ஒன்றுதான், கட்டிய பின் அடிப்பதும் ஒன்றுதான் என்ற நிலைக்கு ஒப்பான விடயமாகவுள்ளது.

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக உரிய அமைச்சருடன் கலந்துரையாடி, சட்டபூர்வமான சதவீதத்தை எட்ட வேண்டும்.

ஆனால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எங்களை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாகவும் ஏமாற்று வழியிலும் செயல்பட்டுகின்றது.

இந்த அநீதிக்கு எதிராக ஏனைய பேருந்து சங்கங்களுடன் இணைந்து நீதிமன்றத்தை நாடத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes