General02 July 2026

'வரி சக்தி 2026' தேசிய வரி வாரம் ஜூலை 6 இல் ஆரம்பம் - ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

தேசிய வரி வாரத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் ‘வரி சக்தி 2026’ விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த விசேட வேலைத்திட்டம் இந்த மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் என ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாகம் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் பணிப்பாளர் அசித முனசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரி முறைமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், வரிக்கொள்கைகளுக்கு இணங்கி நடப்பதை ஊக்குவிப்பதையுமே இந்த வேலைத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் காரணமாக, குறிப்பாகப் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி போன்ற வரி விகிதங்கள் தற்போதும் உயர் மட்டத்தில் காணப்படுவதாக அசித முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த வரி வாரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டு, வரி வசூலிப்பில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes