General03 July 2026

ஹெட்போன் அணிந்து வீதியில் நடப்போருக்கு எதிராக இனி நீதிமன்ற நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!

ஹெட்போன் (Headphones) அல்லது இயர்போன் (Earphones) அணிந்து இசை கேட்டுக்கொண்டு வீதிகளில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது இவ்வாறான பாதசாரிகளுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வரும் நிலையில், வீதி விபத்துக்களின் அபாயம் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் மொத்தம் 1,323 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றின் மூலம் 1,389 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்துக்களின் எண்ணிக்கை 105 ஆகவும், மரணங்களின் எண்ணிக்கை 107 ஆகவும் அதிகரித்துள்ளது.

பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கவனக்குறைவு, வீதி விதிகளை மீறுதல், அதிவேகம் மற்றும் வாகனங்களை சரியாக பராமரிக்காமை போன்றவையே விபத்துகளுக்கு நேரடி காரணங்களாகும்.

விபத்துகளைக் குறைப்பதற்காக, காவல்துறை அதிபரின் அறிவுறுத்தலின் கீழ் 3 கிலோமீற்றர் தூரத்திற்குள் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்கும் நவீன கருவிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப முறைகள் மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வீதி விபத்துகளுடன் தொடர்புடையவர்கள் எவ்வித பாகுபாடுமின்றி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

எதிர்காலத்தில் கடுமையான அபராதங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes