General07 July 2026

நாடாளுமன்றில் அநாகரிக வார்த்தைப் பிரயோகம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை குழுவிலிருந்து நீக்கக் கோரி சபாநாயகருக்கு அர்ச்சுனா கோரிக்கை!

நாடாளுமன்றத்திற்குள் தமக்கு எதிராக அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையை முடித்த பின்னர், நாற்காலியில் அமர்ந்துகொண்டு தம்மை நோக்கி மிகக் கேவலமான மற்றும் தவறான வார்த்தைகளைப் பிரயோகித்ததாகக் குற்றஞ்சாட்டினார். இந்தச் சம்பவம் நாடாளுமன்றக் கேமராக்களில் பதிவாகியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் அடியாட்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஐவருக்கு எதிராக, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தம் மீதான உயிர் அச்சுறுத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அர்ச்சுனா, தமக்குச் பலமுறை உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கக் கோவையின் விதிகளுக்கு அமைய, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிற்க பாரப்படுத்துமாறு அவர் கோரினார்.

மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நபர் அதே சிறப்புரிமைக் குழுவில் உறுப்பினராக இருப்பது அக்குழுவின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் என்பதால், விசாரணைகள் நிறைவடையும் வரை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை குழுவிலிருந்து இடைநீக்கம் செய்ய சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes