General08 July 2026

சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஜனாதிபதி ஒதுக்கல் நிதியைப் பயன்படுத்தி இரண்டு பதவிகளுக்கான வேதனத்தை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் மற்றும் , புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (08) நிராகரித்தார்.

இதற்கமைய, சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அரச நிதியை அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமை, இரண்டு வேலைகளுக்கு வேதனம் பெற்றுள்ளமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விசேட செயற்திட்ட நிறுவனத்தின் ஊடாக 22 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி இவ்வாறு முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த விசேட செயற்திட்ட நிறுவனத்தில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் 135க்கும் அதிகமானோர் நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு பணிப்பாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டியுள்ளதாகவும் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

சந்தேகநபர் அரசியல் நோக்கத்திற்காகவே இந்த நிதியைப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முன்வைக்கப்பட்ட அனைத்துக் காரணங்களையும் கருத்தில் கொண்ட நீதவான், விசாரணைகள் இன்னும் முடிவடையாததால் பிணை மனுவை நிராகரித்து, சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes