General13 July 2026

மீரிகமவில் புதிதாக சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை மையம் திறப்பு!

கம்பஹா மாவட்டத்தின் மீரிகமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள "சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை மையம்" நேற்று (12) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் மக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டது.

நாட்டின் சிறுநீரக கல் நோயாளிகளின் அறுவை சிகிச்சைக்கான 5,000க்கும் மேற்பட்ட காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கும் நோக்கில் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத இந்தத் திட்டம், இலங்கை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மூன்றே மாதங்களில் நிறைவுசெய்யப்பட்டுள்ளது.

புதிய எண்டோயுரோலாஜிக்கல் (Endourological) தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தவொரு பகுதியைச் சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரும், தமது நோயாளிகளை இங்கு அழைத்து வந்து நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர், சுகாதாரத் துறையில் உள்ள வளங்களைச் சரியாக முகாமைத்துவம் செய்து, காத்திருப்புப் பட்டியலின்றி மக்களுக்கு விரைவான மற்றும் சிறந்த மருத்துவச் சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes