General15 July 2026

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை - கொழும்பு பேராயர் தெரிவிப்பு

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க வெளியிட்ட பொய்யான தகவல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பேராயரின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க, தற்போதைய இராணுவத் தளபதி தனது பதவிக்காலத்தை நீடித்துக் கொள்வதற்காக, கடந்த ஜூலை 2ஆம் திகதி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஒரு பழக்கூடையுடன் சென்று சந்தித்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, குறித்த திகதியில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானில் இருந்ததாகவும், திருத்தந்தை லியோ அழைப்பு விடுத்திருந்த முக்கிய கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த ஆதாரமற்ற கருத்துக்கள் மதக் குழுக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தக்கூடும் என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes