General23 July 2026

பெருந்தோட்ட நிறுவனங்களின் நிதி வைப்புச் சேகரிப்பு சட்டவிரோதமானது: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

நுகர்வோரிடம் இருந்து வைப்புகளைப் பெற்றுக்கொண்டு இலாபம் வழங்கும் எந்தவொரு பெருந்தோட்ட நிறுவனத்தையும் அங்கீகரிப்பதற்கோ அல்லது அனுமதிப்பதற்கோ இலங்கை மத்திய வங்கியிடம் எத்தகைய பொறிமுறையும் கிடையாது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாணயக் கொள்கை மீளாய்வு அறிக்கை வெளியீட்டின்போது 'ஹிரு நியூஸ்' எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ஆளுநர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்வாறான முறையில் வைப்புகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய வங்கியின் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வைப்புகளை இவ்வாறான முறையில் ஏற்கும் செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்பதால், இத்தகைய செயற்பாடுகளில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறு மத்திய வங்கி ஆளுநர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே இவ்வாறான திட்டங்களில் எவரேனும் பணம் முதலீடு செய்திருந்தால், உடனடியாக அந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் காவல்துறையிலோ அல்லது மத்திய வங்கியிலோ முறைப்பாடு செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த நிறுவனங்கள் சட்டபூர்வமாக இயங்குவதற்கு விரும்பினால் நிதி நிறுவனமாகப் பதிவு செய்வதே ஒரே வழியாகும் என்றும், அவ்வாறு செய்யாமல் வைப்புகளை ஏற்பது இலங்கையில் முழுமையாகச் சட்டவிரோதமானது என்றும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes