General25 July 2026

அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக அரசாங்கப் பிரதிநிதி அசித நிரோஷன எகோட விதான நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மறுத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் தீய நோக்கத்துடன் கூறப்பட்டவை என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய ஆதாரமற்ற மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதற்காக நாடாளுமன்ற சிறப்புரிமையை தவறாகப் பயன்படுத்துவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களின்; ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான முன்மொழிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயர் நீதிமன்றங்களைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் தற்காலிகமான முறையிலோ அல்லது தற்காலிக சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவோ அறிமுகப்படுத்தப்படக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள், நிரூபிக்கக்கூடிய நிறுவனத் தேவை, வெளிப்படையான பொது நியாயப்படுத்தலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சங்கம் கோரியுள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற சிறப்புரிமையின் பாதுகாப்பு இல்லாமல், நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகோடா விதானகேவுக்கு சங்கம் சவால் விடுத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes