International25 July 2026

தாய் கைவிட்ட குட்டி லீமுரை பொம்மையின் உதவியுடன் பராமரிக்கும் கொலம்பியா விலங்கியல் பூங்கா!

கொலம்பியாவில் உள்ள கலி (Cali) விலங்கியல் பூங்காவில், பிறந்த உடனே தாயால் கைவிடப்பட்ட வரிவால் லீமுர் (Ring-tailed lemur) குட்டியை, பொம்மையின் உதவியுடன் மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்துப் பராமரித்து வருகின்றனர்.

கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலி விலங்கியல் பூங்காவில் கடந்த ஜூன் 18-ஆம் திகதி பிறந்த இந்த வரிவால் லீமுர் குட்டி, பிறந்தபோது 70 கிராம் எடையுடன் மட்டுமே இருந்தது.

இந்த நிலையில், இந்தக் குட்டியைப் பராமரிப்பதையோ அல்லது போதிய பால் கொடுப்பதையோ அதன் தாய் நிறுத்தியது. இதனால் அக்குட்டியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதை அறிந்த விலங்கியல் பூங்கா மருத்துவக் குழுவினர், அதனைத் தாயிடமிருந்து பிரித்துத் தனியாகப் பராமரிக்கத் தொடங்கினர்.

மனிதர்களின் நேரடித் தொடர்பைக் குறைக்கவும், தாய் லீமுரின் உடல் சூடு மற்றும் பாதுகாப்பை உணர்த்தவும் அக்குட்டிக்குச் சிறிய பஞ்சுப் பொம்மை (Stuffed toy) ஒன்று வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அக்குட்டி எப்போதும் அந்தப் பொம்மையைக் கட்டியணைத்தபடியே உள்ளது.

தற்போது 88 கிராம் எடையுடன் ஆரோக்கியமாக வளர்ந்து வரும் அக்குட்டிக்கு, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பால் மற்றும் காய்கறிக் கூழ் உணவாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், சிறப்பு இன்சுபேட்டரில் வைக்கப்பட்டுள்ள அக்குட்டிக்கு, தூரிகைகள் மூலம் உடலைத் தூய்மைப்படுத்தித் தாயைப் போன்ற பராமரிப்பை விலங்கியல் பூங்கா மருத்துவக் குழுவினர் வழங்கி வருகின்றனர்.

அக்குட்டி முழுமையாக வளர்ந்த பிறகு, பூங்காவில் உள்ள மற்ற லீமுர் கூட்டத்துடன் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes