International25 July 2026

”நான் தைபொய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போதிலும் போராட்டம் தொடரும்” – CJP நிறுவுனர் அபிஜித் தீப்கே

இந்தியாவின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் போராட்டம், தனது நோய்வாய்ப்பட்ட நிலையினாலும் தொய்வடையாது என 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யின் (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியொன்றில், கடந்த சில நாட்களாகத் தான் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பரிசோதனைகளின் முடிவில் தனக்கு தைபொய்ட் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் தொடர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தினமும் நரம்பு வழியே மருந்துகள் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், இந்தச் சூழ்நிலையிலும் நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமது ஆதரவாளர்களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ச்சியான அமைதிப் போராட்டங்கள் மூலம் தங்களது இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த தீப்கே, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என வலியுறுத்தினார்.

மருத்துவ கல்லூரி நுழைவுக்கான நீட் போட்டிப் பரீட்சைகளில் இடம்பெற்ற முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்கக் கோரியும், பரீட்சை முறைமை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கோரியும், மத்திய கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தியும் இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், கடந்த ஜூன் 28 முதல் முன்னெடுத்து வந்த 26 நாட்கள் தொடர் உணவு தவிர்ப்பை சோனம் வாங்சுக் இந்த வார தொடக்கத்தில் முடிவுக்குக் கொண்டுவந்தார்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட மாட்டாது, பரீட்சை சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும், அத்துடன் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரத்தினால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சாதகமாக பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு வழங்கிய எழுத்துப்பூர்வ உறுதிமொழியைத் தொடர்ந்தே சோனம் வாங்சுக் தனது உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டார்.

இருப்பினும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை டெல்லி ஜந்தர் மந்தரில் தங்களது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes