Sports25 July 2026

ஜஃப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் ரத்து: ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு!

ஊழல் தடுப்பு மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஜஃப்னா கிங்ஸ்  அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் நிகழ்வு உரிமையாளரான 'இன்னோவேட்டிவ் புரொடக்‌ஷன் குரூப்' (IPG) நிறுவனம், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, லங்கா ப்ரீமியர் லீக் நிகழ்வு உரிமை ஒப்பந்தத்துக்கு இணங்க, ஜஃப்னா கிங்ஸ் அணியின் அனைத்துப் பொறுப்புகளையும் IPG நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வீரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளைச் செலுத்துதல் மற்றும் அணியின் ஏனைய அனைத்து ஒப்பந்தக் கடமைகளையும் நிறைவேற்றுதல் ஆகியன அடங்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, லங்கா பிரீமியர் லீக் தொடரின் நேர்மையைப் பேணிப் பாதுகாப்பதில் தாங்கள் உறுதியுடன் இருப்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஊழல் மற்றும் விளையாட்டின் நேர்மைக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடத்தைக்கும் எதிராக எவ்வித சகிப்புத்தன்மையுமற்ற கொள்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பின்பற்றி வருகின்றது.

லங்கா பிரீமியர் லீக் தொடர் முழுவதும் உயர்மட்ட நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை பேணப்படுவதை உறுதிசெய்ய அனைத்துப் பங்குதாரர்களுடனும் இணைந்து தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes