General26 July 2026

கிளிநொச்சியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்: 9 பேர் விளக்கமறியலில்!

கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் பிரசன்னபடுத்திய போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட 09 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக சூரியன் செய்திப் பிரிவுக்கு காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

முன்னதாக, கிளிநொச்சி - முட்கொம்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சட்டவிரோதமான முறையில் அழித்துத் துப்புரவு செய்வதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, சம்பவ இடத்திலிருந்த சிலர் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த மோதலில் காவல்துறை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 04 அதிகாரிகள் காயமடைந்து, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டமையால், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியைச் சட்டவிரோதமாக அழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கனரக இயந்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes