General26 July 2026

நிதி பற்றிய குழுவின் அறிக்கை உண்மையை மூடிமறைக்கிறது - ஐ.தே.க சாடல்

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் நிதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக நாடாளுமன்ற நிதி பற்றிய குழு வெளியிட்ட அறிக்கை, அரைகுறை உண்மைகளை மட்டுமே வெளிப்படுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றினூடாக இதனைக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, குறித்த அறிக்கையானது உயர்மட்ட அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கட்டமைப்பின் தோல்வி (Systemic Failure) எனச் சித்தரித்து, அரசாங்கமும் உயர்மட்ட அதிகாரிகளும் தமது பொறுப்புகளிலிருந்து தப்பியோட முயற்சிப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மத்திய மட்டத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு கீழ்மட்ட அதிகாரிகள் பலிகடா ஆக்கப்பட்டுள்ள போதிலும், பொது நிதிக்கு முதன்மைப் பொறுப்புக்கூற வேண்டிய திறைசேரிச் செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் பயன்படுத்திய காலாவதியான மின்னஞ்சல் சேவையக அமைப்புகள் (Email Servers) மற்றும் 'Multi-Factor Authentication' போன்ற அடிப்படைத் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாமை குறித்து KPMG மற்றும் கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (SL-CERT) ஆகிய நிறுவனங்கள் விடுத்த முன் எச்சரிக்கைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தியதே இந்த இணையவழித் தாக்குதலுக்கு நேரடி காரணமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மத்திய வங்கியிலிருந்து புதிய அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்குப் பொறுப்புகள் மாற்றப்பட்டபோது, நிலவிய பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஜனவரியில் இந்த மோசடி இடம்பெற்று சில மாதங்களுக்குப் பின்னரே (மார்ச் 9) மத்திய வங்கிக்கும் அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இது உயர்மட்ட நிர்வாகத்தின் கடுமையான அலட்சியப்போக்கையே தெளிவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இந்த நிதி நிர்வாகத் தோல்வி குறித்து உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes