General26 July 2026

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இலங்கைக்கு கைகொடுக்கும் அமெரிக்கா!

நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கு எதிராகச் செயல்படும் தேசிய திறனை மேம்படுத்துவதற்கும், அமெரிக்கா உதவுவதற்கு முன்வந்துள்ளது.

அதற்கமைய, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து விசேட "பொது சுகாதார பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய்க்காவி மூலம் பரவும் நோய்கள் ஒழிப்புத் திட்டத்தை" ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் மற்றும் குடிமக்கள் உதவி திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், அமெரிக்க பசிபிக் இராணுவம் மற்றும் 18 ஆவது தியேட்டர் மெடிக்கல் கமாண்ட் ஆகியவற்றின் தடுப்பு மருத்துவம், பூச்சியியல், நோய் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நுளம்பு ஒழிப்பு நிபுணர்கள், இலங்கை சுகாதார அதிகாரிகளுடன் தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

கொழும்பை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம், டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழித்தல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளுதல் மற்றும் முன்னறிவிப்புகளின் அடிப்படையிலான தடுப்பு முறைகளை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவை முன்னெடுக்கப்படவுள்ளன.

இலங்கைக்கான அமெரிக்கத் தற்காலிக இராஜதந்திரப் பொறுப்பாளர் ஜேன் ஹோவெல் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "இந்த கூட்டுறவானது தற்போதைய டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வரவிருக்கும் பொது சுகாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் இலங்கைக்கு ஒரு நிலையான பலத்தை வழங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes