General26 July 2026

2026 ஜூன் மாதத்தில் சொகுசு வாகனப் பதிவுகள் அதிகரிப்பு

கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த வாகனப் பதிவுகளில் வீழ்ச்சி நிலவியபோதிலும், சொகுசு வாகனப் பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளதாக 'ஜே.பி. செக்யூரிட்டீஸ்' நிறுவனத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் 62,776 ஆகக் காணப்பட்ட மொத்த வாகனப் பதிவுகள், ஜூன் மாதத்தில் 58,151 ஆகக் குறைவடைந்துள்ளது.

இருப்பினும், உயர் வருமானம் பெறும் நுகர்வோரின் தேவைகள் காரணமாகச் சொகுசு வாகனப் பிரிவு ஸ்திரமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஜூன் மாதத்தில், 26 புத்தம் புதிய சொகுசு வாகனங்களும், 121 பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனங்களும் பதிவு செய்யப்பட்டன.

மெர்சிடீஸ் பென்ஸ் சந்தையில் முன்னிலையில் உள்ள நிறுவனமாக விளங்குவதுடன், 20 புதிய வாகனங்களும் 39 பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் அதில் பதிவாகியுள்ளன.

மேலும், ரோல்ஸ் ரோய்ஸ் ஃபான்டம் (Phantom), பென்ட்லி பென்டேகா மற்றும் பெராரி போன்ற அதிநவீன சொகுசு வாகனங்களும் இந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று, பயணிகள் வாகனப் பிரிவில் SUV மற்றும் Crossover ரக வாகனங்களின் பதிவு மே மாதத்தில் இருந்த 5,511 இலிருந்து ஜூன் மாதத்தில் 5,933 ஆக உயர்வடைந்துள்ளது.

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஜே.பி. செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முர்தசா ஜாபர்ஜி, உயர் ரக வாகனங்களைக் கொள்வனவு செய்வோர் மூலமாக அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாகனங்களில் பலவற்றின் மீது விதிக்கப்படும் வரி விகிதம் அவற்றின் இறக்குமதி மதிப்பில் 200 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால், இந்தக் கொள்முதல்கள் அரச கருவூலத்திற்கு அதிக வருவாயைச் சேர்க்கின்றன.

இது நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.
Related recommendation
Hiru TV News | Programmes