General28 July 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிக்கப்பட்டது ஏன்? - நீதி அமைச்சர் விளக்கம்

இலங்கையில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முதல் நீதவான்கள் வரை அனைவரினதும் ஓய்வுபெறும் வயதை 2 ஆண்டுகளால் நீடிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் குறித்து நிலவும் சர்ச்சைகளுக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெளிவுபடுத்தியுள்ளார்.

”நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் இந்த வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

வளர்வடைந்த நாடுகளில் 10 லட்சம் மக்களுக்கு 47 முதல் 60 நீதிபதிகள் உள்ள நிலையில், இலங்கையில் 10 லட்சம் பேருக்கு 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.

1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச ரீதியில் பல நாடுகளில் ஓய்வுபெறும் வயது 70 ஆக உள்ளது. நீதிபதிகளின் அனுபவம் அதிகரிக்கும் போது சட்டக் கட்டமைப்பு மேலும் வளர்ச்சியடையும்.

நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு, பணியாளர்கள் நியமனம் மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் போன்ற தொடர்புடைய துறைகளின் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதன் மூலம் மட்டுமே மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கும் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வயது அதிகரிப்பு மேன்முறையீட்டு அல்லது உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு மட்டும் உரியது அல்ல; மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்கள் வரை அனைத்து நிலைகளிலும் உள்ள நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கும் பொதுவானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த வயதெல்லை நீடிப்பு நடவடிக்கைகளால் நீதித்துறை சுதந்திரத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறிப்பிட்ட ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு இந்தத் திருத்தம் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படவில்லை என்றும், இது ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பையும் சீரமைப்பதற்கான நடவடிக்கை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசியலமைப்பின்படி நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கோ அல்லது அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை. 2020 ஆம் ஆண்டிலும் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட போது மக்களின் விருப்பம் கேட்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes