General29 July 2026

பெந்தோட்டையில் பராமோட்டர் விபத்தில் பாலஸ்தீன பெண் பலி!

பெந்தோட்டை கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் இடம்பெற்ற பராமோட்டர் (மோட்டார் பொருத்தப்பட்ட பரசூட்) விபத்தொன்றில் 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெந்தோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பராமோட்டர் சவாரியின் போதே, இன்று மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சவாரியின் போது பராமோட்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, அதனைச் செலுத்திய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த நபர் உயிர் தப்பியுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் உடலம் நாகொட மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes