General30 July 2026

மதுபான விலை உயர்வுக்கு மத்தியிலும் மதுவரி வருவாய் அதிகரிப்பு

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரித் திணைக்களம் 141.5 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டிற்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள மொத்த 245 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கில், முதல் ஆறு மாதங்களுக்கான இலக்கு 119.3 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் 118.6 சதவீத வருவாய் இலக்கை எட்டும் வகையில் திணைக்களம் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான 117.03 பில்லியன் ரூபாய் வருவாயுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க வருவாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. ஹேமரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மதுபான உற்பத்திக்காக 17.25 மில்லியன் லீற்றர் நிர்ப்பூரண மதுசாரம் (Absolute Alcohol) பயன்படுத்தப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அது 19.6 மில்லியன் லீற்றராக அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மதுபானப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் அவ்வப்போது மதுபான விலைகளை அதிகரித்திருந்த போதிலும், பல்வேறு நிர்வாக மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் மதுவரி வருவாயை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் முடிந்துள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes